29 செப்டம்பர், 2015

பின்னிரவில் ஒரு சிரிப்பொலி

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது கேட்டது அந்தக் கள்ளச் சிரிப்பொலி

இந்த அதிகாலை நேரத்தில் இத்தனை அழகாய் சிரித்தது யாரென இருட்டில் தேடினேன்

சிரித்தது அவள் தான் என தன் முதல் கற்றை ஒளிக்கீற்றால் காட்டிக்கொடுத்தான் கதிரவன்

கனவில் எதையோ நினைத்துப் புன்முறுவல் புறிந்து கொண்டிருந்தாள் அவள்

குழந்தை உறக்கத்தில் சிரித்தால் இறைவன் பூ கொடுக்கின்றான் என்று அர்த்தமாம்

என்றோ ஒரு நாள் அம்மா சொன்னதை ஞாபகமூட்டியது என் செல்ல மகளின் சிரிப்பொலி

பெருக்கெடுத்த முத்த மழையை அடக்கி அவள் கனவு கெடாமல் ஓரிரு முத்தம் பொழிந்து உறங்கிப்போனேன்

மழலை பேச்சு மட்டுமே ஆனந்தமல்ல மழலை உறக்கமும் அதில் அந்த கள்ள நகைப்பும் பேரானந்தமே !!

- அப்பா 😊

14 ஏப்ரல், 2015

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு !!

தமிழா.... மதம் வளர்க்கிறேன் என்ற பெயரில் ஏன் தமிழன்னையை கொல்லப்பார்க்கிறாய்
மதம் செழிக்க தமிழை மறந்து சமஸ்கிருதத்தின் பின்னால் ஏன் ஓடினாய்
மதம் வளர்க்க தமிழில் அரபியையும் உருதுவையும் கலந்து ஏன் பேசினாய்
மதம் பரப்ப தமிழை விடுத்து அன்னியன் கொணர்ந்த ஆங்கிலத்தை ஏன் நாடினாய்

கடவுள் மொழிகளுக்கு அப்பாற்பட்டவர்
அவரை நாட நாம் வடமொழியையும்
அன்னிய மொழியையும் நாட வேண்டியதில்லை
தாய் தமிழில் வழிபட்டாலே இறைவன் செவிசாய்வான்

இந்த தமிழ்ப்புத்தாண்டில் உறுதி மொழியெடு
மதத்திலும் இசையிலும் மின்னஞ்சலிலும் கைப்பேசியிலும்
முகப்புத்தகத்திலும் எழுதுவதிலும் பேசுவதிலும் மற்ற எல்லா துறையிலும்
முடிந்தவரையில் தமிழை மட்டுமே பயன்படுத்துவேன் என்று உறுதியெடு

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு இதை உரக்கச்சொல்வோம் உலகுக்கு !!
இனம் ஒன்றாக மொழி வென்றாக புது வேலை எடுப்போம் விடிவுக்கு !!
தமிழின் வெற்றிப்பாதையில் பிற மொழிகள் வந்தால் அவைகளை விருந்து வைப்போம் தமிழன்னைக்கு !!

-- கண்ணீர் மல்க வேண்டிக்கொள்ளும் ஒரு தமிழன் !!