30 டிசம்பர், 2010

உன் பிறந்தநாள்

எப்படா இந்த கடிகார முள் நகரும் என்று
பன்னிரண்டு மணி அடிக்கும் வரை காத்திருந்து,
மெழுகுவர்த்தியோடு உன் அறையில் நுழைந்து,
மெல்லியதாய் உன்னை தட்டி எழுப்பி, உன் காதருகே
மெல்ல 'happy birthday செல்லம்' என்று சொல்லி,
நீ ஆச்சர்யத்தில் புன்னகைக்கும் போது கேக் வெட்டசொல்லி,
அந்த கேக்-கை உன் முகத்தில் பூசி விளையாடி,
விடிந்ததும் நீ குளிக்க போகும்போது குளியலறை கதவில் போட்ட
பழைய ஆடையை உருவி, தரமாட்டேன் என்று வம்பு பண்ணி,
அதற்க்கு பதில் நான் வாங்கிய மயில் கலர் புதுப்புடவையை கொடுத்து,
அதை நீ கட்டியவுடன் 'ஐயோ chancey இல்ல... தேவதை மாதிரி இருக்க'
என்று கூறி உன் கன்னம் சிவக்க வைத்து, அதில் ஒரு முத்தம் பதித்து,
பின்னர் உன்னை கோவிலுக்கு அழைத்துப்போய், அங்கே குருக்களிடம்
'ஐயரே, இன்னிக்கு எம்பொண்டாட்டிக்கு பொறந்த நாள்,
நூறு வருஷம் தீர்க்க சுமங்கலி பவ-னு மந்திரம் சொல்லுங்கோ' என்று சொல்லி,
'இருடா, நூறு வருஷம் உன்னை பாடாப்படுத்த போறேன் பாரு',
என்று சொல்லிக்கொண்டே நீ என் பைக்கில் ஏறி என்னை கட்டிக்கொண்டு,
உன் ஆசைப்படி முதியோர் இல்லத்தில் அனைவருக்கும் விருந்தளித்து,
பின்னர் உன் கன்னம் ஒட்டிக்கொண்டே கடற்கரையில் காற்று வாங்கி,
உனக்கு ஓரிரு மொக்கை கவிதையும் கரடி பொம்மையும் பரிசளித்து,
வீடு சேர்ந்ததும் நீ என் தோள் சாய்ந்து 'நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேண்டா,
Thank You' என்று நீ சொல்லும்போது, 'ச்சீ, Thank You எல்லாம் சொல்லாத லூசு',
என்று உன் தலையில் செல்லமாய் தட்டி, உன்னை இறுக்க கட்டிக்கொண்டு.......
..........
என...... ......... இவை அத்தனையும் தொலைபேசியிலேயே வாழவேண்டிய கட்டாயத்தில்
நீயும் நானும்..... " இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! "

--நாச்சு

17 டிசம்பர், 2010

உயிர்த்தல்

கிறுக்கல்கள் என நினைத்த வார்த்தை யாவும், நானும் ஒரு கவிதை தான் என முட்டி மோதி எழுகின்றன....
உளறல்கள் என ஒதுக்கிய பேச்சுக்கள் யாவும், நானும் ஒரு காதல் மொழி என உயிர்த்தெழுகின்றன ...
சத்தங்கள் என வெறுத்த ராகம் யாவும், நானும் ஒரு மெல்லிசை என துடித்தெழுகின்றன...
கோடுகள் என கசக்கிய காகிதம் யாவும், நானும் ஒரு ஓவியம் என மலர்ந்தெழுகின்றன...
இத்தனைக்கும் உயிர் கொடுத்துவிட்டு ஒன்றும் தெரியாதவள் போல் மெல்லியதாய் சிரிக்க எப்படி முடிகிறது உன்னால் மட்டும்?

-நாச்சு

08 டிசம்பர், 2010

டவுன் பஸ்

கருந்தேள் போல கருவிழியால கொட்டிப்புட்ட,
கருவாப்பய நெஞ்சு கெடந்து துடிக்குது புள்ள,
கன்னம் ரெண்டில் மயிலெறகா சீண்டிபுட்ட,
கிறுக்குப்பய கன்னம் இப்போ ஏங்குது புள்ள,
தோள் சாஞ்சு என் எடைய கொஞ்சம் கூட்டிபுட்ட,
சண்டிப்பய மனசு எனம்புரியாம தவிக்குது புள்ள,
நாளைக்கும் இதே பஸ்ஸுல தான் வருவேன்,
நீயும் வந்துரு என்னக்கொஞ்சம் அள்ளிக்கொள்ள....

- நாச்சு